இலங்கை அரசு தொடர்ந்து சிறுபான்மை மக்களை துன்புறுத்துகின்றது
சுயேச்சை வேட்பாளர்களின் வெற்றி, தொழிற்கட்சி அரசுக்குச் சொல்லும் செய்தி என்ன? – தமிழில்: ஜெயந்திரன்
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறவேண்டும்: கனடா பிரதமர்
இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிற்கு எதிரான மனித உரிமைமீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் குறித்து பொறுப்புக்கூறவேண்டும் என கனடா தொடர்ந்தும் வேண்டுகோள் விடுக்கும் என கனடா பிரதமர்ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கறுப்;பு ஜூலையின் 41 வது வருடத்தை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-
41வருடங்களிற்கு முன்னர் இன்றைய தினம் இலங்கையின் கொழும்பில் தமிழ் பொதுமக்கள் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து தாக்குதல்கள் ஆரம்பமாகின.
ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிர்கள் இழக்கப்பட்டன,மேலும் பல தமிழர்கள் காயமடைந்தனர், பாலியல் வன்முறைகளிற்கு இலக்கானார்கள்,நாட்டிலிருந்து தப்பியோட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
கறுப்பு ஜூலை எனப்படும் தமிழர்களிற்கு எதிரான இனக்கலவரம்,பதற்றங்களை அதிகரித்தது. அது பின்னர் தசாப்தகால ஆயுதமோதலாக பரிணமித்தது.
இலங்கையின் வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயமாக அது விளங்குகின்றது.
2022 மே18ம் திகதியை தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் தினமாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை கனடாவின் நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டதுநிறைவேற்றியது.
இந்த அர்த்தமற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களை நினைவுகூர்வதில்கனடாவின் தமிழர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகத்தினருடன் ஐக்கியத்தை உள்ளதை வெளிப்படுத்துவதற்கான கனடாவின் அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகின்றது.
மனித உரிமைகளின் உறுதியான பாதுகாவலன் என்ற அடிப்படையில் இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிற்கு எதிரான மனித உரிமைமீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் குறித்து பொறுப்புக்கூறவேண்டும் என கனடா தொடர்ந்தும் வேண்டுகோள் விடுக்கும்.
கறுப்புஜூலையின் பின்னர் 1800 தமிழர்கள் கனடாவிற்குவருவதற்கும் தங்களினதும் தங்கள் குடும்பங்களினதும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் தேவையான விசேட நடவடிக்கைகளை கனடா எடுத்தது.
உலகில் அதிகளவு புலம்பெயர் தமிழர்கள் தற்போது கனடாவிலேயே வாழ்கின்றனர்,ஒவ்வொருநாளும் அவர்கள் எங்கள் சமூகத்திற்கு வழங்குகின்ற பங்களிப்பை நாங்கள் கொண்டாடுகின்றோம்,நாங்கள் எப்போதும் அவர்களை பாதுகாப்போம்.
இன்றைய நாளில்,கறுப்புஜூலையில்துயரத்தை சந்தித்த அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் தங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதில் நான் கனடாவின் பிரஜைகளுடன் இணைந்து கொள்கின்றேன்.
கறுப்பு ஜுலை படுகொலையை ஒருபோதும் மறக்கடிக்க முடியாது: பா.உ உமா குமரன்
கறுப்பு ஜுலை கலவரங்களால் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளாகக் கடத்தப்படுவதாகவும், அவற்றை ஒருபோதும் மறக்கடிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன், இவ்விடயத்தில் நீதிக்கான தமது போராட்டம் தொடரும் என உறுதியளித்துள்ளார்.
1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட ‘கறுப்பு ஜுலை’ கலவரங்கள் அரங்கேறி இன்றுடன் (23) 41 வருடங்கள் கடந்திருக்கின்றன. தமிழர்கள் மத்தியில் மிகமோசமான தாக்கத்தையும் , தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்பங்களையும் ஏற்படுத்திய இக்கலவரங்கள் தொடர்பில் இன்னமும் நீதியோ, பொறுப்புக்கூறலோ நிலைநாட்டப்படவில்லை.
இதுகுறித்து அண்மையில் பிரிட்டனில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவான முதலாவது தமிழ்ப்பெண் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட உமா குமாரன் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்றார்.
அப்பதிவில் அவர் கறுப்பு ஜுலை கலவரங்களை அடுத்து தமிழ்மக்கள் உலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்ததாகவும்இ அவர்கள் இன்னமும் நீதிக்காகக் காத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமாரனின் பெற்றோர் யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக்கொண்டவர்கள் என்ற போதிலும்இ போரின் விளைவாக பிரிட்டனுக்குப் புலம்பெயரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அதன்படி கறுப்பு ஜுலை கலவரங்களின்போது இடம்பெற்ற கொடுமைகள் குறித்து தனது பெற்றோர் தனக்குக் கூறியிருப்பதாக எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்துள்ள உமா குமாரன், அக்கலவரங்களினால் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளாகக் கடத்தப்படுவதாகவும், அவற்றை ஒருபோதும் மறக்கடிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இன்றைய தினத்தில் கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்த அனைத்து உயிர்களையும் நினைவுகூருவதாகவும், இவ்விடயத்தில் நீதிக்கான தமது போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம்: வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,700 ரூபா வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து தொழில் அமைச்சின் செயலாளர் வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 21ஆம் திகதி தம்மால் வெளியிட்ட வர்த்தமானி இரத்து செய்யப்படுவதாக தெரிவித்து தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஏ.விமலவீர இம்மாதம் 10ஆம் திகதியிடப்பட்ட புதிய அதிவிசேட வர்த்தமானியை வௌியிட்டுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1,700 ரூபாவை நிர்ணயித்து தொழில் ஆணையாளரால் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வர்த்தமானியொன்று வௌியிடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சின் செயலாளர் ஆர்.பீ.ஏ.விமலவீர மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டிருந்தார்.
இந்த வர்த்தமானியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும் விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் மேலதிக கொழுந்து கிலோகிராம் ஒன்றுக்கு 80 ரூபா வீதம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஊழலை வெளிப்படுத்தும் அதிகாரிகளை அடக்குவதா?: சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவு மீது குற்றச்சாட்டு
ஊழலை விசாரிப்பதற்குப் பதிலாக, அதனை வெளிப்படுத்தும் அதிகாரிகளை அடக்குவதற்கே சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவினர் செயற்படுவதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கிடையில், செயலாற்றும் பதவிகள் மூலம் சுகாதார சேவையின் தகவல்களை மூடிமறைத்து, தகவல்களை அறியும் சந்தர்ப்பத்தையும் மறைத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவின் 27 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய மருத்துவ வழங்கல் துறைக்கு கூட நிரந்தர துணை இயக்குநர் ஜெனரல் இதுவரை காலம் நியமிக்கப்படவில்லை.
மருத்துவ ஆய்வுகூட சேவையில் கடமையாற்றும் பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ளது. கடமையாற்றும் பதவிகள் காரணமாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் வீழ்ச்சி கண்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் பெல்லெனாவை இடமாற்றம் செய்யுமாறு கோரி தேசிய வைத்தியசாலை ஊழியர்கள் நான்கு தடவைகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட போதிலும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால் தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் இடமாற்றம் செய்யுமாறு வைத்திய சங்கம் அச்சுறுத்திய நான்கு மணித்தியாலங்களில் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக” சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் மேலும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா அனுமதி
இலங்கையில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோழி இறைச்சி, முட்டை மற்றும் அன்னாசிப்பழங்களுக்கு நீண்டகாலமாக விதிக்கப்பட்ட தடைகளை அந்நாட்டு அரசாங்கம் நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர,
சீன சுங்க பொது நிர்வாக பிரதி அமைச்சர் (Vice Minister of General Administration of Customs) வாங் லிங்ஜூங் உள்ளிட்ட குழுவினர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்நாட்டில் அன்னாசி விளையும் விதம் உள்ளிட்ட கோழிப்பண்ணை தொடர்பான தயாரிப்புகளின் தரம் சீன சந்தையில் உறுதிப்படுத்துவதற்காக பல நடைமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் அதற்காக பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர் என்றார்.
மேலும், சீனா சந்தை வாய்ப்புகளுக்கு போதுமான கோழி மற்றும் முட்டைகள் மற்றும் அன்னாசிப்பழங்களை ஏற்றுமதி செய்ய உற்பத்தியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கறுப்பு ஜுலை- பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை: சமூகப்பிரதிநிதிகள் சுட்டிக்காட்டு
தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜுலை கலவரங்கள் அரங்கேறி 41 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படவில்லை என சமூகப்பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட ‘கறுப்பு ஜுலை’ கலவரங்கள் அரங்கேறி இன்றுடன் (23) 41 வருடங்கள் கடந்திருக்கின்றன. தமிழர்கள் மத்தியில் மிகமோசமான தாக்கத்தையும், தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்பங்களையும் ஏற்படுத்திய இக்கலவரங்கள் தொடர்பில் இன்னமும் நீதியோ, பொறுப்புக்கூறலோ உறுதிசெய்யப்படவில்லை.
இந்நிலையில் கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதுடன், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும் என வலியுறுத்தி வடக்கு – தெற்கு சகோதரத்துவம் எனும் அமைப்பினால் கொழும்பு, பொரளை கனத்தை பொதுமயானத்துக்கு முன்பாக உள்ள சுற்றுவட்டத்தில் ‘மீண்டுமொரு கறுப்பு ஜுலை வேண்டாம்’ எனும் தொனிப்பொருளில் நினைவுகூரல் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த வடக்கு – தெற்கு சகோதரத்துவம் அமைப்பின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் ‘தமிழ்மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை மறவோம்’, ‘இனப்படுகொலைக்கு நீதி வழங்கு’ எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
இங்கு கருத்து வெளியிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஸ்ரீநாத் பெரேரா, வடக்கில் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமையை அடுத்து, கொழும்பில் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட மிகக்கொடூரமான வன்முறைகளை நினைவுகூர்ந்தார். அத்தோடு இந்நாட்டில் மீண்டுமொரு கறுப்பு ஜுலை கலவரங்கள் ஏற்படக்கூடாது என்பதை முன்னிறுத்தியே இந்த நினைவுகூரல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆனால் தற்போதும் தமிழர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடரும் நிலையில், அவற்றைக் களைந்து அவர்கள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு இடமளிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
அதேபோன்று கறுப்பு ஜுலை கலவரங்கள் ஆரம்பமான தினத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் பெரும் எண்ணிக்கையான தமிழ் கைதிகள் கொல்லப்பட்டமை குறித்து சுட்டிக்காட்டிய அவர், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி நிலைநாட்டப்பட்டு, பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார்.
அதேவேளை அங்கு கருத்துரைத்த அரசியல் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், சிவில் செயற்பாட்டாளருமான அருட்தந்தை சக்திவேல், யாழ் நூலக எரிப்பு, கறுப்பு ஜுலை கலவரங்கள் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் குறித்து சுட்டிக்காட்டியதுடன், இன்னமும் இந்நாட்டில் தமிழ்மக்கள் அமைதியாக வாழ்வதற்கான சூழல் உறுதிசெய்யப்படவில்லை என விசனம் வெளியிட்டார். அதுமாத்திரமன்றி ஞானசார தேரருக்கும், ஹிருணிகா பிரேமசந்திரவுக்கும் பிணை வழங்கமுடியுமெனில், பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்கமுடியாது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதே நேரம் பல பகுதிகளில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். முற்றவெளி மைதானம் முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது.
அதே போல் கிளினொச்சியிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
இந்தியா: மோடியின் பாதுகாப்புக்கு 506.32 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழகம் புறக்கணிப்பு
இந்தியாவின் நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு வரவு – செலவு திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு நாடாளுமன்றில் தாக்கல் செய்தார். இதில் பிரதமர் மோடியை பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்பு படைக்கு 506.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கண்டனங்களும் எழுந்துள்ளது.
நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு வரவு – செலவு திட்டத்தில் வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம், தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பில் மாற்றமில்லை, தங்கம், வெள்ளி, பிளாட்டினத்திற்கு இறக்குமதி வரி குறைப்பு, வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, 80 கோடி மக்கள் பயன் பெறும் கரீப் அன்னயோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு ஆகிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
கண்டனம்
இந்நிலையில், மத்திய நிதியமையச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் உரையில் தமிழ்நாடு, தமிழ் என்ற வார்த்தைகளே ஒருமுறை கூட இடம்பெறவில்லை. வழக்கமாக திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியத்துடன் பட்ஜெட் உரை தொடங்கப்படும். இம்முறை அதுவும் தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தாம்பரம் – செங்கல்பட்டு விரைவுச் சாலை திட்ட ஒப்புதல், மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ஒப்புதல் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சிகளும், அதனைச் சார்ந்த தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.