அமைச்சர் டக்ளஸ் மீது நம்பிக்கை வைக்கமுடியாது: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது எந்தவொரு விடயத்திலும் நாங்கள் நம்பிக்கை வைக்கமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் கடத்தல்,காணாமல்போதல் சம்பவங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி குழுவுக்கும் தொடர்பிருப்பதாக பல்வேறு நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை காணாமல்போனவர்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் தெரிவித்தார்.
படுகொலைசெய்யப்பட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஆசுலி நிமலன் சௌந்தரநாயகம் அவர்களின் 21வது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் அனுசரணையுடன் இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டது.
இந்த இரத்ததானமுகாமில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உட்பட பெருமளவான இளைஞர் யுவதிகள் இரத்தம் வழங்கியிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினை ஜனாதிபதி நியமித்துள்ளதாக செய்திகளில் பார்க்ககூடியதாகவுள்ளது. கடந்த காலத்தில் கடத்தல், காணாமல் போதல் சம்பவங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி குழுவுக்கும் தொடர்பிருப்பதாக பல்வேறு நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை நியமித்தது ஏற்றுக்கொள்ளமுடியாது.
இலங்கையில் உள்ள மீனவர்களின் பிரச்சினையை பார்க்கமுடியாத அமைச்சர் எவ்வாறு அந்தமானில் உள்ள மீனவர்களைப்பார்க்கப்போகின்றார். எந்தவொரு விடயத்திலும் அமைச்சர் டக்ளஸ் மீது நம்பிக்கை வைக்கமுடியாது என்று தெரிவித்தார்.