பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் தான் பதவி விலகவுள்ளதாக நேற்று செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அமெரிக்க தூதுவராகப் பதவியேற்க வுள்ளதாலேயே தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கூறுகையில்,
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, அமெரிக்கத் தூதுவராக பதவியேற்குமாறு என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அந்தக் கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். இதன்படி எதிர்வரும் இரண்டு, மூன்று நாட்களில் நான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுள்ளடுன், 29 ஆம் திகதி அமெரிக்கா நோக்கி பயணமாகவுள்ளேன்.
அமெரிக்கா ஐநா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புரிமையை மீண்டும் பெற்றுக்கொள்ளவுள்ளது. மனித உரிமைகள் பேரவைக்கு 10 வருடங்களாக நான் சென்றுள்ளேன். இந்நிலையில் அமெரிக்கா அதன் உறுப்புரிமையை பெறும் போது அந்த நாடே அதன் தலைமையையும் பெற்றுக்கொள்ளும். இதன்படி எமது நட்புறவை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். இதனை நிறைவேற்றவே நான் அங்கு செல்கின்றேன்.
இதேவேளை எனக்கு வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களுக்கு நன்றியை கூறிக்கொள்கின்றேன். 27 வருடங்களாக இந்த பாராளுமன்றத்தில் சேவையாற்றியே நான் இப்போது அமெரிக்கா செல்கின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.