41 நாட்களின் பின்னர் வழமைக்கு திரும்பியது முல்லைத்தீவு: கொரோனா தாக்கம் காரணமாக நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டமும் வழமைக்கு திரும்பியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 41 நாட்களாக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று(01) அதிகாலை 4 மணியுடன் கட்டுப்பாடுகளுடன் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது .
அதன்படி கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இரவு 10 மணிமுதல் நாட்டில் அமுலாக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், பின்னர் கட்டம் கட்டமாக நீடிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை நீக்கப்பட்டிருந்தது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.
அதேவேளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தது அதனடிப்படையில் பொதுமக்கள் தமது தேவைகளை முன்னெடுக்க முடியுமெனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இன்று அதிகாலை 4 மணியுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டமும் வழமைக்கு திரும்பியுள்ளது.