ஜனாதிபதி ரணில் நாளை வடக்குக்கு விஜயம் – 3 நாட்களில் பல நிகழ்வுகளில் பங்கேற்பார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக நாளை வெள்ளிக்கிழமை வடக்குக்கு விஜயம் செய்யவுள்ளார். 3 நாட்கள் விஜயமாக வடக்கு வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் உரித்து தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரிமங்களை வழங்கி வைக்கவுள்ளார்.

அத்தோடு வடக்கில் இளைஞர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பொன்றிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பயிற்சி பிரிவொன்றையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். இதேவேளை, கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண்கள் சுகாதாரப் பிரிவொன்றும் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளது.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் இதயநோய் பிரிவும், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் புதிய விடுதியொன்றும் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளது. இவை தவிர யாழ்ப்பாணத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார். இவ்வாறு 10 முக்கிய நிகழ்வுகளில் ஜனாதிபதிபங்கேற்கவுள்ளார்.

அது மாத்திரமின்றி வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இந்த விஜயத்தின்போது விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது. எவ்வாறிருப்பினும் அரசியல் ரீதியான சந்திப்புக்கள் எவையும் திட்டமிடப்படவில்லை எனத் தெரியவருகின்றது.