தமிழ்த் தேசிய கட்சிகளின் எம்.பிக்களை இன்று நேரில் சந்திக்கின்றார் ஜனாதிபதி

வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்களை இன்று புதன்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள தமது அலுவலகத்தில் சந்தித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பில் நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறியவந்தது.

இந்த விவகாரத்தை ஒட்டிய விடயங்களை ஜனாதிபதி தரப்புடன் கையாளும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இந்த நேர ஒதுக்கீடு குறித்து அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நேற்று முன்தினம் மாலை இந்தச் சந்திப்பை நடத்துவதற்கு நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.

இந்தச் சந்திப்பு இன்று புதன்கிழமை நண்பகல் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறும் என அவர் ஏனைய எம். பிக்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

அநேகமாக தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு எம்.பிக்களும்கூட இதில் பங்குபற்றக்கூடும்.