அவுஸ்திரேலியாவின் தீவு சிறையின் கொடூரத்தை அம்பலப்படுத்திய அகதி பத்திரிகையாளர் 

பப்பு நியூ கினியாவில் உள்ள மனுஸ்தீவில் செயல்பட்ட அகதிகளை சிறை வைக்கும் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமின் கொடூரத்தை அம்பலப்படுத்தியவர்களில் முக்கியமானவர் குர்து அகதியும் பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி. அந்த தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான அகதிகளில் இவரும் ஒருவர். 

“அவ்வாறான சூழ்நிலைகளில் இருப்பது எவ்வளவு மன வலியாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் பூச்சானியின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. தடுப்பின் முடிவில் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டவராக அவர் ஆகிவிட்டார்,” எனக் கூறியுள்ளார் தி கார்டியன் ஊடகத்தின் பத்திரிகையாளரான பென் டோஹெர்டி. கடந்த 2017ம் ஆண்டு மனுஸ்தீவு முகாமில் மிகவும் பதற்றமான நிலை நிலவிய போது அம்முகாமை ரகசியமாக பார்வையிட்டவர் பென் டோஹெர்டி என்பது குறிப்பிடத்தக்கது.

“இத்தடுப்பு முறைக்குள் சிக்கியுள்ள ஒருவர், இந்த முறை எவ்வளவு கொடூரமானது என உலகுக்கு அம்பலப்படுத்துகின்றனர். இச்செயல்பாடு உண்மையில் வியக்கத்தக்கது, முக்கியமானது,” என அகதியும் பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானியின் பணி தி கார்டியன் பத்திரிகையாளர் டோஹெர்டி பாராட்டியுள்ளார்.

அவுஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாமிற்குள் இருந்து கொண்டே முகாமில் நிலவும் நடைமுறைகளை, சக அகதிகளின் கதைகளை, முகாம் அதிகாரிகளின் நடந்து கொள்ளும் விதத்தை பூச்சானி வெளிக்கொணர்ந்தார்.

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முறை அம்பலப்பட்டாலும் அது இன்றும் செயல்பட்டு வருகிறது. இன்று நவுருத்தீவில் 40க்கும் மேற்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் வைக்கப்பட்டுள்ளனர், பப்பு நியூ கினியாவில் 80க்கும் மேற்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் வைக்கப்பட்டிருக்கின்றனர்.