கச்சதீவு விவகாரத்தில் புதிய உடன்படிக்கை எதுவும் இல்லை – மறுக்கிறாா் அமைச்சா் அலி சப்ரி

பாக்கு நீரிணை கடற்பரப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மற்றும் கச்சதீவு பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் எவ்வித புதிய உடன்படிக்கையும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

அது தொடர்பிலான எவ்வித பேச்சுவார்தைகளும் இடம்பெறவில்லையென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். பாக்கு நீரிணை கடற் பரப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தொடர்பான விவகாரங்கள் மற்றும் கச்சதீவு பிரச்னை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் விரிவான உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் “ஹிந்து” பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை என இந்திய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், அவ்வாறான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.