அண்மையில் கப்பல் மூலம் கனடா செல்ல முற்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்திருப்பதாக வியட்னாம் தூதுவராலயம் சார்பாக குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் இருவர் கடந்த வாரம் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதையடுதது குறித்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன் என்ற 32 வயதான குடும்பஸ்தரே மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் பொருளாதார நிலைமை காரணமாக புலம் பெயர முயற்சித்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இவருக்கு பிறந்து ஆறு மாதங்களேயான பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டுக்குக் கொண்டு வர வழியறியாது குடும்பத்தினர் தவித்து வருவதோடு, சம்பந்தப்பட்ட தரப்புகளின் உதவியை எதிர்பார்த்து நிற்பதாகத் தெரிய வருகிறது.