திருகோணமலை மாவட்டம், சேருவில பிரதேச செயலக பிரிவில் திருமங்களாய் சிவன் ஆலயம் திருகோணமலை நகரிலிருந்து 51 கிலோ மீற்றர் தொலைவிலுள்ளது.
இப் பகுதிக்கு பயணிக்க வேண்டுமாயின் 3 கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டும் குறித்த 3கிலோ மீற்றர் பாதையானது வீதியின்றியே உள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த திருமங்களாய் கோவிலுக்குச் சென்று, அப்பகுதி மக்களைச் சந்தித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தொல்பொருள் திணைக்களம் மற்றும் அரச இயந்திரத்தின் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இப்பகுதிகளில் தமிழர்கள் செறிவாக வாழ்ந்த போதும், 1964க்கு பின்னர் திட்டமிட்ட சிங்கள பௌத்த குடியேற்றங்களாலும், தமிழருக்கெதிரான வன்முறைகளாலும் அப்பகுதியிலிருந்து தமிழர்கள் வெளியேறிய நிலையில், தற்போது அடர்ந்த வனப்பகுதியாக காட்சியளிக்கின்றது.
இப்பகுதிகளில் அண்மைய ஆய்வுகளின் போது 05 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 03 கல்வெட்டுக்கள் 10-11 நூற்றாண்டுக்குரியதெனவும், 02 கல்வெட்டுக்கள் 14ம் நூற்றாண்டுக்குரியதெனவும் கருதப்படுகின்றது.
இந்தக் கோவிலை ஆக்கிரமிப்பதற்கு தொல்பொருட் திணைக்களம் முயற்சிகளை எடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இதன் நிலவரத்தை கண்டறிய குறித்த பாராளுமன்ற உறுப்பினர் மோட்டார் சைக்கிள் ஊடான பயணத்தை அப் பகுதிக்கு அண்மையில் (07.08.2022) சென்று பார்வையிட்டார். தமிழர்களுடைய வரலாற்றை பறைசாற்றும் இக் கோயிலை தொல் பொருள் என்ற போர்வையில் ஆக்கிரமிப்பு செய்யப்படவுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் உரிய தரப்பினர் அரசியல்வாதிகள் சிறுபான்மை சமூகம் மீதான, மதத்தின் மீதான அடக்கு முறைகளையும் அபகரிப்புக்களையும் நிறுத்த வேண்டும் என ஏகோபித்த எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். இதனை திறம்பட பாதுகாத்து தமிழர் பூமி என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.