வவுனியாவில் இயல்பு நிலை பாதிப்பு
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்கு சட்டம் காரணமாக வவுனியாவிலும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தவர்களுக்கு எதிராக அரச ஆதரவாளர்களால் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து வன்முறைகள் ஏற்பட்டிருந்தன. இதனையடுத்து உடனடியாக அமுலுக்கும வரும் வகையில் நாடு முழுவதும் நாளை (11) புதன்கிழமை காலை 7 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த ஊரடங்கு சட்டம் காரணமாக வவுனியாவில் வங்கிகள், அரச நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் என்பன பூட்டப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து சேவையும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
அத்துடன், வவுனியா மொத்த மரக்கறி விற்பனையகம் மற்றும் மொத்த வியாபாரிகள் சிலர் தமது வியாபார நிலையங்களை திறந்து வியாபாரம் செய்வதையும், ஊரடங்கு சட்டத்தையும் மீறி குறித்த வியாபார நிலையங்களுக்கு மக்கள் செல்வதையும் அவதானிக்க முடிகிறது.
அதே நேரம் ஊரடங்குச் சட்டம் காரணமாக திருகோணமலை நகர்,கிண்ணியா மூதூர், வெருகல் உட்பட புஹாரியடி சந்தியில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இன்று (10) மக்களின் நடமாட்டம் குறைந்து அனைத்து வியாபார நிலையங்களும் மூடிக் காணப்படுகின்றன. தேவையற்ற விதத்தில் வீதியில் நடமாடுவோரை காவல்துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்புகின்றனர்.